Friday, August 26, 2011

9. ஆத்ம பிரார்த்தனையில் ஆராதனை



9.     ஆத்ம பிரார்த்தனையில் ஆராதனை

     ஆத்ம பிரார்த்தனையில் பக்தி என்பது மிகவும் வலிமை வாய்ந்தது. இது போலித்தனமான தற்புகழ்ச்சியைப் பெருமளவில் கரைத்து விடுகின்றது. ஆத்ம பிரார்த்தனைப் பயிற்சியில் தெய்வீக அதிர்வுகளை உணர்வது, செவி மடுப்பது, சேவை செய்வது, அவரைச் சரணடைந்து விடுதல், இவற்றைப் பக்தி என்னும் மேடையில் ஏற்றிவிடுவது, இறைவனுக்கு மகிழ்வோடு செய்கின்ற சேவையாகும். ஆத்ம பிரார்த்தனையைத் தொடர்ந்து செய்தால் உங்களது உடல், மனம், ஆன்மா ஆகிய அனைத்திற்கும் இதம் அளிக்கும். அறிவுக்குக் குணம் அளிக்கும்.
     ஆத்ம பிரார்த்தனையின் முடிவில் பாடப்படும் பாட்டு ஆரத்தி என்பதாகும். ஆரத்தி என்ற சொல்லுக்கு நெருக்கம் என்று பொருள் கூறப்படுகின்றது. இது பொருள் பொதிந்த முக்கியத்துவம் பெற்றது. ஆத்ம பிரார்த்தனையில் காட்டப்படுகின்ற தீபம் மகத்தானது. எல்லாப் பக்தர்களின் இதயத்திலும் சென்று உச்ச நிலைக்குக் கொண்டு செல்கின்றது. தீபத்தின் பொருள் இயற்கையில் விதிக்கப்பட்ட காலம் வரை நமது வாழ்க்கையில் தூய்மையாகவும் அனைவரிடத்திலும் அன்பு செலுத்தியும் முடிவில் மறைவதையும் உணர்த்துகின்றது.
     ஆத்ம பிரார்த்தனை செய்யும் முறை முக்கியமானது. தினந்தோறும் காலையிலும் மாலையிலும் பிரார்த்தனையில் கடைசி நான்கு நிமிடம் ஆரத்தி முறையில் பாடப்படுகின்றது. ஆரத்திப் பாடலில் தத், யம், அதீதம், ஓம் என்ற பிரபஞ்ச ஒலிகள் இணைந்துள்ளன. இவை கோர்வையாகத் திரும்பத் திரும்ப உச்சரிக்கப்படும்போது நமது உடலில் உறைகின்ற இயல்புணர்வுகளை விழிப்படைய வைக்கின்றது. ஒளியோடு இது தொடர்பு கொள்கிறது.
       இயல்பு நிலையை அடைவதற்கும் தெய்வீக ஞானம் பெறுவதற்கும் ஒரே வழி இயல்புணர்வை எழுப்புவதே ஆகும். ஆத்ம பிரார்த்தனை மூலம் இயல்புணர்வுக்கு சக்தி பெருகி, தீமைகள் விலகி, நல்லவை பெருகும். புலன் உணர்வுகளைக் கடந்த காட்சிகளும் தெய்வீக ஆற்றலும் உண்டாகும். ஆத்ம பிரார்த்தனையில் நான்காவது நிலையில் ஆரத்திப் பாடல் ஒலிக்கப்படுகின்றது. அவ்வமயம் உட்கார்ந்த நிலையில் கைகள் அதீத உத்திரபோதி முத்திரையில் இருக்க வேண்டும் (தலைக்கு மேல் துரியம் உள்ள இடத்தில் கைகளின் பெரு விரல்கள் இரண்டையும் இணைக்க வேண்டும். ஆள்காட்டி விரல்கள் இரண்டையும் ஒன்றுசேர்த்து நேராக நீட்டி விடவும்; மற்ற விரல்களை மடக்கி வைக்கவும்). அப்பொழுது எண்ணங்களை உச்சிக்குழிக்குக் கீழே உள் நாக்குக்கு மேலே செலுத்த வேண்டும்.

       இவ்விடத்தில் நுண் அதிர்வால் இயற்கை மெய்ப்பொருளை ஆராதனை செய்வதால் மெய்யுணர்வோடு இயல்புணர்வும் ஈர்க்கப்பட்டு முச்சுடர் விரிந்து ஒலியே ஒளியாகின்றது. அந்த ஆத்மா, அக, புற அதீதத்தின் சூக்கும ஜீவப் பயணத்தை உற்று, உற்று உணர்தல் மேன்மையானது.

    தொடக்கத்தில் துள்ளித்திரிந்து கொண்டிருந்த எண்ணங்கள் தற்போது கட்டுக்குள் அடங்கி மோன நிலைக்கு வந்தடைகின்றன. அப்போது உடம்பைப் பக்கவாட்டில் லேசாக அசைக்க வேண்டும். ஆத்ம பிரார்த்தனையின் ஆரத்திப் பாடல் பாடப்படுகின்ற நேரத்தில் ஆராதனை விளக்கினால் பிரார்த்தனை நிகழ்கின்ற பகுதியில் முக்கோண வடிவத்தில் ஏற்றிப் பூசை செய்ய வேண்டும்.

      இந்த நேரத்தில் உடலில் குடி கொண்டுள்ள இயல்புணர்வுகள் ஒன்றுசேர்ந்து நம் இதயத்தில் தூய ஒளியினை ஏற்றுவிக்கும். இவ்விதம் ஒருங்கிணைந்த மாசு மருவற்ற தூய ஒளி என்பது இயற்கை ஆற்றலோடு கூடிய ஆன்மீக ஆற்றலாகிறது. பரம்பொருள் வகுத்துள்ள நியதிப்படி ஒளி பல்வேறு சமயங்களில் பல்வேறு சட்டங்களின் படியே வெளிப்பட்டுச் செயல்படுகிறது. இயல்புணர்வின் ஆற்றலால் இவை நிர்வகிக்கப்படுகின்றன. இதனை ஆன்மீக உணர்வோடு பழகப்பழக விண்வெளியிலுள்ள ஒளிக்கும், இந்த பரிசுத்தமான ஒளிக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்படுகிறது. இந்தப் பரிசுத்த ஒளி தெய்வீக ஒளியாக உருமாற்றம் கொண்டு உடலில் உள்ள உயிராற்றலை உணர வைக்கின்றது. தெய்வீக ஒளி அல்லது ஆன்மீக ஒளி ஆனந்தத்தை அளிக்க வல்லது. ஆற்றலையும் பரிபூரணமாகப் பொழியக் கூடியது. இதன் விளைவாக மனத்தில் சாந்திநிலையாகக் குடிபுக முடிகிறது. உறுதிபூண்ட மனத்தோடும் தெய்வ நம்பிக்கையோடும் மேற்கொள்ளப்படுகின்ற எளிய முறை ஆத்ம பிரார்த்தனையின் பக்தி மூலம் ஆத்மா பொய்யான தன் கனவில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தானே இயல்பு என்கிற உண்மையில் என்றும் அளவற்ற நன்மைகளை அளிக்கும்.


     இப்பெருவழி நாள்தோறும் இயல்பை ஆராதனை செய்வதால் நம்மிடமுள்ள இயல்புணர்வுகள் விழிப்படைந்து தடைகளை கரைந்து இயல்பை அறியச் செய்கிறது.



No comments:

Post a Comment