Friday, August 26, 2011

8. ஆத்ம பிரார்த்தனை வடிவம்


8. ஆத்ம பிரார்த்தனை வடிவம்

       தற்போதைய மற்றும் கடந்தகால சூழ்நிலைகள் எவையாக இருந்தாலும் எல்லோருமே மகிழ்ச்சியும் நிறைவும் உள்ளார்ந்த மன அமைதியும் மற்றும் வெளிப்புற வெற்றியும் விரைவாக ஆத்ம பிரார்த்தனை வடிவத்தின் மூலம் பெற இயலும்.
     ஆத்ம பிரார்த்தனையில் பிரார்த்தனை செய்யும் வடிவம் பழமையானது; நுட்பமானது. இந்த வடிவம் இனம், மொழி, நிறம் கடந்தது. எல்லோரும் இந்த வடிவத்தினைப் பிரார்த்தனை செய்யலாம். எல்லா பிரார்த்தனையைக் காட்டிலும் ஆத்ம பிரார்த்தனையில் விரைவாகப் பயனை அடைய இந்த வடிவம் நமக்கு உதவுகிறது. இது நமது இலக்கை விரைவாக எடுத்துச் செல்கிறது. இந்த வடிவத்தில் அவரவர்கள் வழிபடும் இறைவனை வைத்து வழிபட்டால் அவர்கள் இலக்கை நோக்கிப் பல மடங்கு வேகத்தில் செல்ல இந்த வடிவமைப்பு உதவுகிறது.
      இந்த இயற்கையின் அச்சின் சக்தி ஒன்றே இருவிதமாகிச் சீராக ஆற்றலை ஒருங்கிணைத்துச் சக்தியைக் கொடுக்கிறது. இந்த இயற்கை அச்சு என்பது 23.5° கோணமாகும். இந்த இயற்கை அச்சின் பேரியக்க மண்டல ஒருங்கிணைப்பு ஆற்றல் மிகப் பெரிய சக்தியாக அனைத்திலும் உள்ளடக்கிச் சீராக இயக்கச் செய்கிறது. இது பிரபஞ்சத்துக்குள்ளேயும், வெளியேயும், அண்டசராசரம் முழுவதும் இந்த ஆற்றல் மிகத் துல்லியமாக இயங்கிச் சக்தியைக் கொடுத்துக் கொண்டு இருக்கிற்து.
       இந்த இயற்கையின் அச்சே நாம் ஆத்ம பிரார்த்தனையில் வழிபடும் வடிவமாகத் திகழ்கின்றது. இந்த வடிவம் ஒன்றே இரண்டாகி நமக்குச் சமநிலையும் சக்தியும் உடையதாக்குகின்றது. இந்த ஆற்றல் உள்ளேயும், வெளியேயும் ஒருங்கிணைந்து தன்மாற்றம் ஏற்படுத்துகிறது. இதனால் அகத்தையும், புறத்தையும் மிக விரைவாக உணர்ந்து கொள்ள வழிவகை செய்கிறது.
      இயற்கையில் கோள்கள் 23.5° கோணத்தில் செம்மையாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆத்ம பிரார்த்தனையில் பிரார்த்தனை செய்யும் வடிவத்தில் 23.5° கோணத்தில் இரண்டு கோடுகள் உள்ளன. அவை நம்முள்ளே உள்ள நல்ல சக்தியைச் செம்மைப்படுத்துகின்றன. மற்றொன்று நமக்கு வெளியிலுள்ள நல்ல சக்தியைச் செம்மைப்படுத்துகின்றது. இந்த இரண்டுகோடுகளினால் உலகத்தில் உள்ள இரட்டிப்புத் தன்மையை அறிய முடிகிறது. இந்த வடிவத்தில் அடித்தளக் கோடு நாம் இப்பிறப்பின் நோக்கத்தைச் செயல்பட வைக்கின்றது. இந்த வடிவத்தில் உள்ள வட்டம், முழுமையான வாழ்க்கை முறையை அறியச் செய்கின்றது. முக்கோணத்தின் வெளியில் உள்ள இடம் கர்ம வினைகளைக் குறைக்க வழிவகை செய்கின்றது. மேல் உள்ள சிறிய முக்கோணம் நம்மிடம் உள்ள ஆன்மாவை உணர நமக்குச் சீரான சக்தியைக் கொடுத்து நமது இயல்புணர்வை அறிய செய்கிறது.
      இந்த விதிமுறைகளைப் பற்றிச் சிந்திக்கும்போது, அவை நம்மை நேரடியாக ஆழ்ந்த அறிவாற்றலை நோக்கும்படியான சூழ்நிலையை உருவாக்கி இயற்கையின் உள்ளீடான செயல்களைக் காணச் செய்கிறது. நமது முன்னோர்கள் புனிதமான நிலக்கணக்கினை உணர்வதற்கு ஆன்மாவைப் பற்றிய அறிவு அவசியம் என்று நம்பினார்கள். இந்தவிதிமுறைகளின் மாதிரிகளை நமது உள்மனவெளியின் சங்கேதவடிவம் என்னும் விழிப்பு உணர்வுகளில் அறிந்திருந்தனர். புனிதம் என்பது உள்ளுணர்வினையும், விழிப்புணர் வினையும் ஒருங்கே கொண்ட அதீதான மறை பொருள் என்றும் அர்த்தம் நிறைந்தது என்றும் அவர்களுக்குத் தெரிந்திருந்து... தன்னுணர்வின் அனுபவத்தோடு இணைக்கப்படும்போது, புனிதமான நிலைக்கணக்கு அனுபவத்தோடு இரண்டறக் கலக்கச் செய்வதாகப் பொருள் பொதிந்த ஆத்ம பிரார்த்தனையில் பிரார்த்தனை செய்யும் வடிவம் அடைகிறது. இயற்கை ஆதாரமெனும் பரிசு என்பது உங்களை இன்றியமையாத உள்முகத் தூய்மையான ஆற்றல் ஆதாரத்தோடு சுழலச் செய்கிறது. இயற்கை அச்சுப் படிவம் உங்களது கண்களின் எதிரே தோன்றுகிறது.

      ஆத்ம பிரார்த்தனையில் உள்ள வடிவம் நம்மிடம் உள்ள இயல்பு நிலையை உணர வைக்கின்றது; சிந்திக்கச் செய்கின்றது; இந்த உலகத்தில் உள்ள ஆற்றல்கள் இருவகையாகக் காணப்படு கின்றன. அவை நல்லது கெட்டது, ஏற்றம் தாழ்வு, ஆண் பெண், இங்கே அங்கே என ஒன்றுக்கொன்று எதிர்மறையாக உள்ளன. இவ்வாறு இரட்டைப் பொருளாக இருந்தாலும் ஒன்று மற்றொன்றைச் சார்ந்து இருக்க வேண்டும் என்பது நியதி. வெப்பம் இல்லை என்றால் குளிர்ச்சிக்குப் பொருளே இல்லை. கெட்டது இல்லை என்றால் நல்லதுக்குப் பொருளே இல்லை. இவ்வாறு இரு துருவங்களுக்கும் இடையே நிலவுகின்ற மன இறுக்கம் மனித மூளையிலும் பிரதிபலிக்கின்றது. மூளை வலம் இடம் என இரு பிரிவுகளாகப் பிரிந்து உள்ளது. இந்த இரட்டிப்பு அமைப்பு எல்லா மனிதர்களுக்கும் சமச்சீர் நிலையினை உருவாக்குவது இல்லை. நாம் காணும் இரட்டிப்பு நிலை 23.5° கோணத்தில் கோடுகளைத் தொடர்ந்து பிரார்த்தனை செய்தால் உயர் நிலை ஒருமைப்பாடு அமைகின்றது.

      இயல்புணர்வுடன் ஆத்ம பிரார்த்தனையைத் தொடர்ந்து பயில்வோர் அரிய பெரிய செயல்களைச் செய்பவர்களாகவும் மகிழ்ச்சிப் பெருக்குடன் உள்ளவர்களாகவும் பிறருடன் நெருங்கிய நேயம் கொண்டவர்களாகவும் ஆக்கபூர்வமான எண்ணம் உடையவர் களாகவும் திகழ்கின்றனர். அவர்களுடைய கடந்த கால இழப்புகள், துன்பங்கள், துயரங்கள், ஏமாற்றங்கள் இயலாமைகள் அனைத்தும் அறவே மாறி மன நிறைவுடன் வாழும் திறன் பெறுகிறார்கள். அவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் இணக்கமாகவும் மிகவும் ஆனந்த மாகவும் ஆழ்ந்தும் இருக்கின்றனர். சுய முன்னேற்றத்தின் திறனை விரைவுபடுத்துவதற்கு ஆத்ம பிரார்த்தனை மூளையின் உணர்வுகளை விஞ்ஞான முறைப்படி தூண்டுதல் செய்து நமது இயல்புணர்வுகளின் நிகழ்வுகளைப் பகுத்தறியச் செய்கின்றது.
      ஆத்ம பிரார்த்தனையின் வடிவத்தினால் நமது இயல்புணர்வு திறன் பலமடங்கு பெருகுகின்றது. அதனால் விளையும் பயனும் கூடுதலாகவே இருக்கின்றது. மொத்தத்தில் இந்த வடிவம் நமது பிறப்பின் நோக்கத்தை உணரச் செய்கின்றது. இந்த வடிவம் நமக்குக் கிடைத்த மிகப் பெரிய சாதனம் ஆகும்.

     இயற்கை அச்சியின் பேரியக்க ஒருங்கிணைப்பு ஆற்றல் ஹ்ரித் சக்கரத்தில் நுண்ணுணர்வு தன்மாற்றம் ஏற்படுத்திப் பெரு விழிப்பை ஏற்படுத்துகிறது. இந்தத் தன்மாற்றம் மின்காந்தப் பெருநிலையில் சூக்கும சரீரத்தில் உள்ள (நுண் உடலை) இயல்புணர்வை விழிப்படையச் செய்கின்றது. இந்த ஆற்றல் அனாகதச் சக்கரத்தை ஊக்குவித்து, உந்துவதால் உயிர்ச்சக்தியின் (குண்டலனி சக்தி) மேல் நோக்கிச் செல்லும் ஆற்றல் அதிகரிக்கப்படுகின்றது. இந்தச் சக்தி, கபால வெட்ட வெளியை அடைந்ததும், அக அதீதம் சூக்கும சக்தியாகத் தன்மாற்றம் அடைகின்றது. அக அதீதம் சூக்கும சக்தி, சூக்கும சொரூபமாக நித்திய நிலையில் நிர்மலமாக உள்ளது.




No comments:

Post a Comment